Monday, May 2, 2011

2. செய்தொழிலில் தனலாபம் உண்டாக



ஸ்ரீ ராமசந்த்ராய நம:
2. செய்தொழிலில் தனலாபம் உண்டாக
=======================================================================
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்



அயோத்யா காண்டம்: சர்க்கம் 32


=======================================================================
உமா ஸம்ஹிதா
அர்தகாம: படேத் ஸர்கம் யாத்ரா தான கதாம்சகம்
    ராமஸ்யாரண்ய கமன ஸமயே து த்ரிஸந்த்யகம் !!


தாம் எதிர்பார்த்த பணம் அல்லது பொருள் தனக்குக் கை கூடாமை, உத்தியோகத்தால் சம்பள உயர்வு ஏற்படாமை, கொடுக்கல் வாங்கல்களில் தகராறு முதலிய பணக்கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கும் பொதுவாக மேன்மேலும் பணம் விருத்தியாவதற்கும் ஸ்ரீ ராமன் காட்டிற்குப் போகுமுன் செய்த "யாத்ரா தானத்தை" விவரிக்கும் அயோத்யா காண்டம் 32-வது சர்க்கத்தை தினம் மூன்று காலங்களிலும் பாராயணம் செய்ய வேண்டும்.



நிவேதனம் : ஐந்து வாழைப்பழங்கள்.


ஸங்கல்பம்


ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரசாதன, அஸ்ம
து பாத்தேஷூ அர்த்த பரேஷூ கர்மஸூ
புஷ்கல தநாவாப்யர்த்தம் "யாத்ராதான"
த்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே1

ஸ்ரீ வால்மீகி நம:
ஸ்ரீ ஹனுமான் நம:
ஸ்ரீ ராமன் நம:

ஸர்க்கம் 32
யாத்ராதானம்


தத: சாஸநமாஜ்ஞாய ப்ராது: ஸூபதரம் ப்ரியம் !
கத்வா ஸ ப்ரவிவேஷாஸூ ஸூயஜ்ஞஸ்ய நிவேஷனம் !!


ராமன் பிராம்மணர்களுக்குத் தானம் கொடுக்கிறார் என்ற புண்ணியகரமான வார்த்தையைக் கேட்டு லட்சுமணன், தன்னை அழைத்துப் போக ராமன் சம்மதித்ததைப் பற்றி அடங்காத ஆனந்தமடைந்தார். பிறகு அவருடைய உத்திரவுப்படி ஸூயக்ஞருடைய வீட்டிற்குப் போய் அக்னிஹோத்திர சாலையில் அவரைக்கண்டு நமஸ்காரம் செய்து," மித்திரரே! வாரும். உலகத்தில் ஒருவரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்த என் தமையனுடைய வீட்டிற்கு வந்து பாரும்," என்று அழத்தார். ஸூயக்ஞர் காலையில் செய்ய வேண்டிய அக்னிஹோத்திரத்தை முடித்துவிட்டு சகல லக்ஷ்மியும் விளங்கும் ராமனுடைய அந்தப்புரத்திற்கு லட்சுமணனுடன் வேகமாகப் போனார்.


மஹா ஞானியான ஸூயக்ஞரைக் கண்டு ராமனும் சீதையும் பரபரப்புடன் எழுந்து கைகூப்பி, ஹோம அக்னியை உபசரிப்பது போல வலம் வந்து வணங்கினார்கள். உத்தமமான தங்கத் தோள் வளைகளையும், தங்கச் சரட்டில் சேர்க்கபட்ட நவரத்தினங்களையும், குண்டலங்களையும், கைவளைகளையும், புஜகீர்த்திகளையும் இன்னும் பல அபூர்வமான ரத்தினங்களையும்  ராமன் ஸூயக்ஞருக்குக் கொடுத்து உபசரித்தார். பிறகு சீதை நினைவுபடுத்தியபின் "மித்திர!, இந்த ஹாரத்தையும் தங்கக் கொடியையும் ஒட்டியாணத்தையும் தங்களுடைய பாரியைக்கு சீதை கொடுக்க விரும்புகிறாள். அதை அங்கீகரிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். மேலும், தான் வனத்திற்குப் போகும் சமயத்தில் விசித்திரமாய் வேலை செய்யப்பட்ட இந்தக் கேயுரங்களையும் தோள் வளைகளையும் தங்களுடைய பத்தினிக்குக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறாள். பலவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு விலையுயர்ந்த விரிப்புடைய இந்தக் கட்டிலைத் தாங்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்புகிறாள். என் மாமா எனக்குக் கொடுத்த சத்ருஞ்ச்ஜயனென்ற  யானையையும் இன்னும் ஆயிரம் யானைகளையும் தங்களுக்குக் கொடுக்கிறேன்," என்றார். ஸூயக்ஞர் யானைகளை பெற்றுக்கொண்டு ராம லட்சுமணனையும் சீதையையும் ஆசிர்வதித்தார்.


பிறகு பிரம்மா தேவராஜனைக் கட்டளை இடுவது போல் ராமன் மிகுந்தப் பிரியத்துடன், "லட்சுமண, அகஸ்த்தியருடைய புத்திரரையும் விவாமித்திரருடைய புத்திரரையும் இங்கே வருவித்து, லோகத்தில் பயிர்களை ஜலத்தால் போஷித்து வளர்ப்பது  போல், அந்தப் பிராம்மண உத்தமர்களுக்கு ரத்தினங்களைக் கொடுத்துத் திருப்தி செய். அனேகமாயிரம் பசுக்களையும், தங்கம், வெள்ளி, நவரத்தினங்களையும் வேண்டியவரையில் கொடு.


"யஜூர்வேத தைத்ரீய சாகையை அத்யயனம் செய்பவர்களுக்கு ஆசாரியரான ஒரு பிராம்மணோத்தமர் ஒவ்வொரு நாளும் என் தாயின் வீட்டிற்கு வந்து, மிகுந்த பக்தியுடன் அவளுக்கு ஆசிர்வாதம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மஹாவித்துவான். வேதங்களின் ரகசியங்களை அறிந்தவர். வாகனங்கள், பட்டுகள், போர்வைகள், வேலைக்காரர்கள் முதலியவைகளை வேண்டியவரையில் அவர்க்குக் கொடு. நமது வீட்டில் வெகுநாளாகப் பழகிக்கொண்டிருக்கும் நமது மந்திரியும் சாரதியுமான சித்ரரதரென்பவருக்கு எண்ணிறந்த ஆடுகளையும் ஆயிரம் மாடுகளையும் ரத்தினங்களையும் வஸ்த்திரங்களையும் தான்யங்களையும் கொடுத்துத் திருப்தி செய். வேதத்தில் கடம் காலாபமென்ற பாகங்களை அத்யயனம் செய்துகொண்டு பலாச தண்டத்தைத் தரிக்கும் பல பிரம்மசாரிகள் என்னால் ஆதரிக்கப்பட்டிருக்கிறார்கள். எப்பொழுதும் வேதாத்யனம் செய்து கொண்டிருப்பதால் ஆகாரம் தேட அவர்களுக்குப் பொழுதில்லை. இயற்கையாகவே சுறுசுறுப்பு இல்லாதவர்கள். ருசியான பதார்த்தங்களில் விருப்பமுள்ளவர்கள். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட எண்பது வாகனங்களையும், தான்யங்களைச் சுமக்க ஆயிரம் எருதுகளையும், நிலங்களை உழுவதற்கு இருநூறு மாடுகளையும், பால் தயிர் இவைகளுக்காக ஆயிரம் பசுக்களையும் அவர்களுக்குக் கொடு. மேகலையென்ற அரைநூல் மாலையைத் தரிக்கும் அனேக பிரம்மசாரிகள் தங்களுக்கு விவாகம் செய்யவேண்டுமென்று என் தாயை அண்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பசுக்களைக் கொடு. அதனால் கௌசல்யை திருப்தி அடையட்டும்," என்று கட்டளையிட்டார். ராமனால் குறிபிடப்பட்ட தனம் முதலியவைகளை அந்தப் பிராம்மணர்களுக்கு லட்சுமணன் குபேரனைப் போல தானே  கொடுத்தார்.


பிறகு தாரைதாரையாகக் கண்ணீர்ப் பெருக்கிக்கொண்டு நிற்கும் பரிவாரங்களில் ஒவ்வொருவருக்கும் சௌக்கியாகப் பிழைப்பதற்குப் போதுமான தனத்தை ராமன் தானே கொடுத்து, " நாங்கள் திரும்பி  வரும்  வருவரையில் என் அரண்மனையையும் லட்சுமணனுடைய வீட்டையும் சூன்யமாக வைக்காமல் நீங்கள் அங்கிருந்து பாதுகாக்க வேண்டும்", என்றார். பிறகு தன் பொக்கிஷத் தலைவனைத் தருவித்தும், "என் ஐசுவரியம் முழுவதையும் இங்கே கொண்டு வா" என்று உத்தரவு செய்தார். அவைகளை, வேலைக்காரர்கள் குப்பல்களாகக் குவித்தார்கள். பிறகு ராமலட்சுமணர்கள் அவைகளைப் பிராம்மணச் சிறுவர்களுக்கும் கிழவர்களுக்கும் ஏழைகளுக்கும் போதுமான வரையில் கொடுத்தார்கள்.


அப்போது கர்க்கரிஷியின் வம்சத்தில் பிறந்த ஒரு ஏழை பிராம்மணன் அங்கே வந்தார். அவருக்குத் திரிஜடரென்று பெயர். ஏழ்மைத் தனத்தால் தேகம் முழுவதும் மஞ்சள் வர்ணம் படர்ந்திருந்தது. வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லை ஒவ்வொன்றாகப் பொறுக்கி ஜீவனம் செய்கிறவர். மிகவும் வயது சென்றவர். தன் மனைவி மக்களுடன் காட்டில் வசிப்பவர்.


இளம் பெண்ணான அவருடைய மனைவி,  குழந்தைகளை அவருக்குக் காட்டி, "ஸ்வாமி, நாம் ஏழ்மைத்தனத்தை எவ்வளவு காலம் பொறுக்க முடியும்?. தங்கள் கையிலுள்ள கோடாலி, கலப்பை, மண்வெட்டி முதலியவற்றை எறிந்துவிட்டு நான் சொல்லுகிறபடி கேளுங்கள். தங்களுக்கு ஏதாவது திரவியம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் தர்மமே அவதாரம் எடுத்திருக்கும் ராமனைத் தரிசனம் செய்யுங்கள்", என்றாள். அவர் தன் பத்தினியின் வார்த்தையை ஒப்புக் கொண்டு தன் கந்தை வஸ்த்திரத்தை மறைத்துக் கொண்டு ராமனுடைய அந்தப்புரத்திற்குப் போகும் வழியால் அங்கே வந்து சேர்ந்தார். பிறகு அங்கிரஸ் முதலிய மஹரிஷிகளுக்கு சமமான தேஜசுள்ள அந்தப் பிராம்மணரை ஐந்தாவது கட்டுவரையில் ஒருவரும் தடுக்கவில்லை. அவர் ராமனுக்கு அருகில் போய், " ராஜபுத்திர! இந்த உலகம் முழுவதையும் உன் கீர்த்தி வியாபித்திருக்கிறது. நான் பெரிய குடும்பி. அவர்களை  போஷிக்க என்னிடத்தில் வேண்டிய தனமில்லை. காட்டில் உதிர்ந்த நெல்லுகளைப் பொறுக்கி ஒவ்வொரு நாளும் ஜீவனம் செய்கிறேன். ஆகையால் என்னிடத்தில் கிருபை செய்யவேண்டும்" என்றார்.


இந்தப் பிராம்மணன் பெரிய குடும்பி, மஹாதரித்திரன். இவருக்குத் தனத்தில் எவ்வளவு ஆசை இருக்கிறதென்று பரீக்ஷிக்க விரும்பிப் புன்சிரிப்புடன் வேடிக்கையாக , "ஸ்வாமி!, எண்ணிறந்த என் பசுக்களில் ஒரு ஆயிரம் கூட இன்னும் தானம் கொடுக்கப்படவில்லையே. தங்கள் கையிலிருக்கும் கழியை சுழற்றி எறியுங்கள். அது எங்கே விழுகிறதோ அதுவரையில் இருக்கும் பசுக்கள் தங்களுடையத்" என்றார்.


உடனே அந்தப் பிராம்மணன் வெகு பரபரப்புடன் தன் வஸ்த்திரத்தை இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, முழு பலத்துடன் கழியைச் சுழற்றி எறிந்தார். அது சரயு நதிக்கு அக்கரையில் அனேகமாயிரம் பசுக்களுக்கு நடுவில் விழுந்தது. அப்பொழுது ராமன் அந்தப் பிராம்மணரை மிகுந்தப் பிரியத்துடன் ஆலிங்கனம் செய்து, சரயு நதிக்கரையிலிருந்து அந்த மாட்டு மந்தைகள் யாவற்றையும் திரிஜடருடைய வீட்டிற்கு ஒட்டிக் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இடையர்களுக்கு உத்தரவு செய்து, "ஸ்வாமி!, தாங்கள் என்னிடத்தில் கோபிக்காமலிருக்கப் பிரார்த்திக்கிறேன். தங்களுடைய ஒப்பற்ற பலத்தை அறிய  விரும்பியே கழியைச் சுழற்றி எறியும்படி தங்களைச் சொன்னேன். வேடிக்கையாகச் செய்ததே தவிர வேறல்ல. இன்னும் ஏதாவது வேண்டியிருந்தால் கேட்கும்படி பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு யாதொரு தடையும் வேண்டியதில்லை. பிராம்மணர்களுடைய உபயோகத்திற்காகவே என் ஐசுவரியம் முழுவதையும் சம்பாதித்து  இருக்கிறேன். தங்களைப் போன்ற மஹான்களுக்கு அது உபயோகப்பட்டால் அது எனக்கு அளவற்ற கீர்த்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்", என்று அவரை சமாதானம் செய்தார். திரிஜடரும் அவருடைய மனைவியும்  அந்த மாட்டு மந்தைகளைப் பெற்றுக் கொண்டு அளவற்ற ஆனந்தமடைந்து கீர்த்தி, பலம், பிரீதி, சுகம் முதலிய மங்களங்கள் குறைவில்லாமல் விருத்தியாக வேண்டுமென்று மனப்பூர்வமாக ராமனை ஆசீர்வதித்தார்கள்.


பிறகு ராமன் தன் பராக்கிரமத்தால் தர்மமாக சம்பாதிக்கப்பட்ட அளவற்ற ஐசுவரியத்தைத் தன் மித்திரர்களுக்கும் பரிவாரங்களுக்கும் தகுந்த உபசாரத்துடனும் மரியாதையுடனும் கொடுத்தார். அங்கிருந்த பிராம்மணர்களும், மித்திரர்களும், வேலைக்காரர்களும், தரித்திரர்களும், பிச்சைக்காரர்களும் ஆக எல்லோரும் தங்களுடைய யோக்கியதைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி ராமனால் கொடுக்கப்பட்ட தானத்தால் திருப்தி அடைந்தார்கள். திருப்தி அடையாதவர்கள் ஒருவரும் இல்லை.


த்விஜ; ஸூஹ்ருத் ப்ருத்யஜனோதவா ததா
தரித்ர பிக்ஷாசரணச்ச யோ பவேத் !
ந தத்ர கச்சிந் ந பபூவ தர்பிதோ
யதார்ஹ ஸம்மாநந தான ஸம்ப்ரமை: !!
ஸர்க்கம் 32
யாத்ரா தானம் நிறைவு பெற்றது.


மங்கள ஸ்லோகங்கள் கூறி  நிறைவு செய்யவும்.

((((((((((((((((((((((((((((((((ஸ்ரீ ராம ராம ராம))))))))))))))))))))))))))))))))

மங்கள சுலோகங்கள்

ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு,கீழ் காணும் சுலோகங்களை படிக்க வேண்டும்.

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய : பரிபாலயந்தாம்
ந்யாய்யேன மார்கேணமஹீம் மஹீசா : I
கோப்ராஹ்மணேப்ய : சுபமஸ்து நித்யம்
லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸூகினோ பவந்து II

காலே வர்ஷது பர்ஜந்ய : ப்ருதிவீ ஸஸ்யசாலிநீ I
தேசோயம் க்ஷோபரஹித : பராஹ்மணாஸ்ஸந்து நிர்ப்பயா : II
மங்களம் கோஸலேந்த்த்ராய மஹநீய குணாப்தயே I
சக்ரவர்த்தி த நூஜாய ஸார்வபௌமாய மங்களம் II
வேத வேதாந்த வேத்யாய மேக ச்யாமள மூர்த்தயே I
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ச்லோகாய மங்களம் II
விச்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீ பதே :
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் I
பித்ரு பக்தாய ஸ்ததம் ப்ராத்ருபிஸ்ஸஹ ஸீதயா II
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம் II
த்யக்த ஸாகேத வாஸாய சித்ரகூட விஹாரிணே I
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம் II
ஸௌமித்ரிணா ச ஜானக்யா சாபபாணாஸி தாரிணே I
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம் I
தண்டகாரண்யவாஸாய கண்டிதாமர சத்ரவே I
க்ருத்ர ராஜாய பக்தாயா முக்திதாயாஸ்து மங்களாம் II
ஸாதரம் சபரீ தத்த பலமூலா பிலாஷிணே I
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் II
ஹநுமத் ஸமவேதாய ஹரீசாபீஷ்ட தாயிநே I
வாலி ப்ரமதநாயஸ்து மஹா தீராய மங்களாம் II
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூல்லங்கித ஸிந்தவே இ

சித்த ராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம் II
ஆஸாத்ய நகரீம் திவ்யாம் அபிஷிக்தாய ஸீதயா  I
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம் II
மங்களாசாஸந பரை : மதாசார்ய புரோகமை : I
ஸர்வைச்ச பூர்வைராசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம் II

Saturday, April 30, 2011

ஸர்க்கம் 25 கௌசல்யை ராமனுக்கு மங்கள ஆசீர்வாதம் செய்தது

ஸர்க்கம் 25
கௌசல்யை ராமனுக்கு மங்கள ஆசீர்வாதம் செய்தது

ஸாபநீய தமாயஸம் உபஸ்ப்ருச்ய ஜலம் ஸூசி: !
சகார மாதா ராமஸ்ய மங்களாநி மநஸ்விநீ: !!

தன் துக்கத்தை அடக்கிக்கொண்டு, தான் அதுவரையில் அழுது கொண்டிருந்ததால் உண்டாண அசுத்தத்தைப் போக்க ஆசமனம் செய்து சுத்தமாக இருந்து கொண்டு கௌசல்யை, "ரகுகுல திலக, காட்டிற்குப் போகாமல் உன்னைத் தடுக்க முடியவில்லையே. ஆகையால் போய் வா. பதிநான்கு வருஷங்களுக்குப் பிறகு திரும்பி வந்து முன்னோர்களின் ஆசாரப்படி ராஜ்யாபிஷேகம் செய்து கொள். எந்த தர்மத்தை நீ ப்ரீதியுடன் பூர்ணமாக அனுஷ்டிக்கிறாயோ, அந்த தர்மமே உன்னைக் காப்பாற்றட்டும். நாற்சந்திகளிலும் தேவாலயங்களிலும் நீ நமஸ்கரிக்கும் தேவதைகளும் மஹரிஷிகளும் காட்டில் உன்னை ரக்ஷிக்கட்டும். விசுவாமித்திர மஹரிஷியால் உனக்கு உபதேசிக்கப்பட்ட அஸ்திரங்கள் யாவும் உத்தம குணங்களுள்ள உன்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். நீ பெற்றோர்களுக்குச் செய்யும் சிச்ரூஷையும் நீ பேசும் சத்தியமும் உன்னைக் காப்பாற்றட்டும். உனக்குத் தீர்க்காயுசைக் கொடுக்கட்டும். சமித்துகள், தர்பங்கள், அக்னி குண்டங்கள், தேவ பூஜாஸ்தானங்கள், குன்றுகள், மரங்கள், செடிகள், குட்டையான மரங்கள், மடுக்கள், பக்ஷிகள், சர்ப்பங்கள்,சிம்மங்கள் உன்னைக் காப்பாற்றட்டும். சாத்யர்கள், விச்வேதேவர்கள், மருத்துவர்கள், மஹரிஷிகள், தாதாவிதாதா பூஷா பகன் அர்யமா முதலிய பன்னிரண்டு ஆதித்யர்கள், இந்திரன், யமன், வருணன், குபேரன் முதலிய லோகபாலர்கள், பக்ஷங்கள், மாஸங்கள், ருதுக்கள், வருஷங்கள், பகல், ராத்திரி, முகூர்த்தங்கள் முதலியவைகளின் அதிஷ்டான தேவதைகளும் உனக்கு எப்பொழும் மனகளைச் செய்யட்டும். தியானமும் யோகமும் வேத சாஸ்த்திரங்களில் சொல்லப்படும் தர்மமும் உன்னை நான்கு புறங்களிலும் காப்பாற்றட்டும். சனத்குமாரரும் சோமனும் பிருஹஸ்பதியும் சப்த ரிஷிகளும் நாரதரும் உன்னை எப்பொழுதும் காப்பாற்றட்டும். மஹாப்பிரசித்தியுள்ள திக்பாலர்களும் நான் செய்யும் ஸ்தோத்திரத்தால் சந்தோஷித்து உன்னைக் காப்பாற்றட்டும். கடற்கரையில் இருக்கும் மலைகளும் சமுத்திரமும் குபேரனும் வருணனும் சொர்க்கமும் ஆகசமும் பூமியும் நதிகளும் நக்ஷத்திரங்களும் கிரஹங்களும் கிரஹதேவதைகளும் ராத்திரி பகல்களுக்கு அபிமானி தேவதைகளும் இரண்டு சந்தியா தேவதைகளும் உன்னைக் காப்பாற்றட்டும். ருதுக்கள், மாதங்கள், வருஷங்கள் கலைகள், காஷ்டைகளின் அதிஷ்டான தேவதைகள் உனக்கு ஷேமத்தைக் கொடுக்கட்டும். காட்டில் நீ தபஸ்வீயாக வசிக்கும் பொழுது ஆதித்யர்களும் சாத்யர்களும் உனக்குச் சுகத்தைக் கொடுக்கட்டும். ராக்ஷர்களாலும், பிசாசங்களாலும், குரூர நடத்தை உள்ளவர்களாலும், மாம்சத்தைப் புசிக்கும் ஜந்துக்களாலும் உனக்கு பயமுண்டாக வேண்டாம். வானரங்கள், தேள்கள், காட்டு ஈக்கள், கொசுக்கள், ஊரும் ஜந்துக்கள், புழுக்கள் காட்டில் உனக்குக் கெடுதி செய்யாமல் இருக்கட்டும். பெரிய யானைகள், சிம்மங்கள், புலிகள், கரடிகள், பன்றிகள், எருமைகள், பயங்கரமான காட்டுமாடுகள் இவை உனக்குத் தீங்கு செய்ய வேண்டாம். நரமாமிசத்தை தின்னும் மற்ற பிராணிகளும் நான் செய்யும் பூஜையால் திருப்தி அடைந்து உனக்குக் கெடுது செய்ய்யாமலிருக்கட்டும். நீ போகும் வழிகளில் உனக்கு க்ஷேமமுண்டாகட்டும். உன் பராக்கிரமம் வீணாகாமல் நீ உத்தேசித்த பிரயோஜனத்தை அடைவாய். நீ விரும்பும் சகல பொருள்களும் உனக்கு வனத்தில் கிடைக்கட்டும். பூமியிலும் ஆகாசத்திலும் உனக்கு உனக்கு விரோதிகளாக இருக்கும் தேவதைகளும் உனக்கு க்ஷேமத்தை உண்டாக்கட்டும். பிருஹஸ்பதி, சோமன், சுரியன், குபேரன், யமன், அக்னி,வாயு, ஹோமப்புகை, ரிஷிகளிடத்திலிருந்து நீ அப்ஸியத்த மந்திரங்கள் இவையெல்லாம் வனத்தில் நீ ஸ்*நானம் செய்யும் காலத்தில் உன்னைக் காப்பாற்றட்டும். சகல லோகத்திற்கும் பிரம்மாவும், சகல பிராணிகளையும் போஷிக்கும் நாராயணனும், மற்ற ரிஷிகளும் வனத்தி உன்னை ரக்ஷிக்கட்டும்," என்று சொன்னபின் மாலைகளாலும் கந்தங்களாலும், அவர்களுக்குத் தகுந்த ஸ்தோத்திரங்களாலும் தேவதைகளைப் பூஜித்தாள்.

பிறகு மஹாத்மாவான ஒரு பிராம்ணனால் அகியை மூட்டி ஹோமத்திற்காக நெய், சமித்துகள், வெள்ளைக் கடுகு, வெள்ளை மாலைகள் முதலியவைகளை சம்பாதித்து, ராமனுக்கு க்ஷேமம் உண்டாவதற்காக அதில் விதிப்படி ஹோமம் செய்தாள். உபாத்தியாயரும் ராமனுக்கு சகல உபத்திரவங்களும் நீங்கி ஆரோக்கியம் உண்டாக வேண்டுமென்று ஹோமம் செய்து, மிகுந்த ஹவிஸால் ஹோமகுண்டத்திற்கு வெளியில் லோகபாலர் முதலியவைகளுக்கு பலி வைத்தார். பிராம்மணர்களுக்குத் தேன், நெய், தயிர், அக்ஷதை முதலியவைகளைக் கொடுத்து, ராமனுக்கு வனத்தில் க்ஷேம உண்டாகும்படி ஸ்வஸ்தி வாசனம் செய்வித்தாள். பிறகு உபாத்தியாயருக்கு வேண்டியவரையில் தக்ஷிணையைக் கொடுத்துக் கௌசல்யை, "குழந்தாய், தேவந்திரன் விருத்ராஸூரனைக் கொன்று சகல தேவதைகளாலும் வணங்கப்பட்ட பொழுது, அவனுக்கு உண்டான க்ஷேமம் உனக்கும் உண்டாகட்டும். கருடன் அமிருதத்தைக் கொண்டு வரப் புறப்பட்ட பொழுது அவருடைய தாயான வினதை அவருக்கு எந்த க்ஷேமத்தைப் பிரார்தித்தாளோ அது உனக்கு உண்டாகட்டும். அமிருதத்திற்காக சமுத்திரத்தைக் கடையும்பொழுது தைத்யர்களை நாசம் செய்யும் பொருட்டு இந்திரனுக்கு அதிதி எந்த க்ஷேமத்தை அனுக்ரஹித்தாளோ அது உனக்கும் உண்டாகட்டும். அளவற்ற தேஜஸூள்ள மஹாவிஷ்ணு லோகங்களை மூன்றடியால் அளக்கப் போகையில் அவருக்கு நேர்ந்த க்ஷேமம் உனக்கும் உண்டாகட்டும். ருதுக்களும் சமுத்திரங்களும் உனக்குப் பரம மங்களத்தைச் செய்யட்டும்", என்று அவருடைய தலையில் அக்ஷதைகளைப் போட்டு, நேர்த்தியான கந்தத்தை அவருடைய தேகத்தில் பூசி, பிரசித்தமான வீரியத்துடன் கூடின விசல்யகரணி என்ற மூலிகையை ரக்ஷையாகக் கையிற்கட்டி, அதற்குத் தகுந்த மந்திரங்களை ஜபித்தாள்.

மனத்தி மிகுந்த துக்கமிருந்தாலும் சந்தோஷித்தவளைப் போல் காட்டிக் கொண்டு, ராமனைத் தன் அருகில் அழைத்து உச்சி முகர்ந்து ஆலிங்கனம் செய்து தழதழத்த வார்த்தைகளால், "நீ உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற சௌக்கியமாகப் போய் வா. உன் எண்ணங்கள் யாவற்றையும் பூர்த்தி செய்து நோயில்லாமல் மறுபடியும் அயோத்யைக்கு வந்து நீ நமது முன்னோர்கள் அனுஷ்டித்த க்ஷத்திரிய தர்மத்தைக் கைக்கொண்டு நீ சுகமாய் இருப்பதைப் பார்ப்பேன். காட்டில் என் மகனுக்கு என்ன நேருமோ என்ற கவலை தீர்ந்து, உன்னை மறுபடியும் பார்த்த சந்தோஷத்தால் முகம் மலர்ந்தவளாக, உதயமான பூர்ண சந்திரனைக் காண்பது போல் உன்னை மறுபடியும் காண்பேன். தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி, காட்டிலிருந்து வந்து, சிம்மாசனத்தில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதையும் பார்ப்பேன். வனவாசம் செய்து திரும்பி வந்து உன் பதவிக்குத் தகுந்த அலங்காரங்களுடன் எனக்கும் சீதைக்கும் சகல மனோரதங்களையும் பூர்த்தி செய். என்னால் பூஜிக்கப்பட்ட தேவதைகளும் சிவன் முதலியவர்களும், மஹரிஷிகளும் பூதங்களும் அஸூரர்களும் உரகர்களும் திக்குகளும் நீ வனத்திற்குப் போகும்பொழுது உனக்கு சகல மங்களங்களையும் கொடுக்கட்டும்," என்று கண்களில் நீர் ததும்ப விதிப்பிரகாரம் ஆசிர்வாதம் செய்து முடித்து, ராமனுக்கு ரக்ஷையாக அவரைப் பிரதிக்ஷணம் செய்து, மிகுந்த பிரீதியுடன் அடிக்கடி ஆலிங்கனம் செய்து கொண்டாள்.

ராமன் ஸ்வபாவத்திலேயே மஹாதேஜஸ்வி. கௌஸல்யையின் ஆசிர்வாதத்தாலும் ரக்ஷையினாலும் அவருடைய தேஜஸ் விருத்தியாயிற்று. பிறகு எந்த ஆபத்திலும் தர்மம் தவறாமல் நடந்து கொண்டதனால் மஹா கீர்த்தியை அடைந்த ராமன், தாயின் பாதங்களில் அடிக்கடி நமஸ்கரித்து, சீதைக்கு அந்த சமாசாரத்தைத் தெரிவிக்கத் தன் அந்தப் புரத்தை நோக்கி வந்தார்.

ததா து தேவ்யா ஸ க்ருத ப்ரதக்ஷிணோ
நீபீட்ய மாதுச்சரணௌ புந: புந: !
ஜகாம ஸீதாநிலயம் மஹாயஸா
ஸ ராகவ: ப்ரஜ்வலித: ஸ்வயா ஸ்ரியா !!




ஸர்க்கம் 25 நிறைவு பெற்றது.

ஸ்ரீமத் ராமயண பாராயணம் முடிந்த பிறகு, மங்கள சுலோகங்களை படித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.


(((((((((ஸ்ரீ ராம ராம ராம)))))))))

Friday, April 29, 2011

கௌசல்யை சம்மதித்தது ஸர்க்கம் 24

ஸர்க்கம் 24
கௌசல்யை சம்மதித்தது

தம் ஸ்மீக்ஷ்ய த்வவஹிதம் பிதுர் நிர்தேச பாலனே !
கௌஸல்யா பாஷ்பஸம்ருத்தா வசோ தர்மிஷ்ட மபரவீத் !!


"ராமன் தர்மத்திலிருந்து விலகமாட்டான். அவனுடைய தந்தையின் வார்த்தைப்படி நடப்பான் என்பதில் சந்தேகமில்லை," என்று கௌசல்யை நிச்சயமகத் தெரிந்து கொண்டு, அந்த சமயத்தில் கண்ணீர் விடுவது அபசகுனம் என்றெண்ணி அடக்கிக் கொண்டு, "எனக்கும் தசரதருக்கும் அருமைக் குழுந்தையாகப் பிறந்த நீ, இதுவரையில் துக்கத்தையே அறியாதவன்.காட்டிற்கு போய் அங்கே உதிர்ந்து கிடக்கும் நெல்லுகளை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கித் தின்று எப்படிப் பிழைப்பாய்?. உன் வேலைக்காரர்களும் பரிசாரர்களும் நேர்த்தியான அன்னத்தைப் புசித்து சுகமாக இருக்கிறார்களே. அவர்களுக்கு தலைவனான நீ, காட்டில் பழங்களையும் கிழங்குகளையும் தின்று எப்படிப் பிழைப்பாய்?. "ராமன் தசரதனுக்கு மூத்த புதல்வன். அவனிடத்தில் அவருக்கு எல்லையற்ற அன்பு. உத்தம குணங்கள் யாவும் பொருந்தியவன். அப்படியும் அவனை அவர் ராஜ்யத்திலிருந்து துரத்திவிட்டார்",என்று ஒருவன் கேட்டால் அதை அவன் நம்புவனா? அப்படியே நம்பினாலும், ராமனுக்கே ஆபத்து நேரும் பொழுது நமது கதி என்ன ஆகுமோ என்று திகிலடைய மாட்டானா? எல்லாப் பிராணிகளுக்கும் ஆனந்த்தத்தை உண்டுபண்ணும் நீயே காட்டிற்குப் போகும்படி நேர்ந்ததை நினைத்தால், எல்லோருக்கும் சுக துக்கங்களைக் கொடுக்கும் சக்தி தெய்வமே. அதை விட மேலானது ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. உன்னை விட்டுப் பிரிவதால் உண்டாகும் சோகமென்ற நெருப்பு, கோடை காலத்தில் வனத்திலிருக்கும் புல் பூண்டுகளைக் காட்டுத் தீ எரிப்பது போல, என்னை எரிக்கிறது. அதற்கு என் தேகமே இருப்பிடம். உன்னைப் பார்க்காமல் இருப்பதென்ற காற்றால் அது அது வளர்க்கிறது. உன்னை நினைத்து பிரலாபித்ததால் உண்டாகும் துக்கமே அதைப் போஷிக்கும் ஸமித்துகள். ஆறாகப் பெருகும் கண்ணீரே அதில் ஹோமம் செய்யப்படும் ஆஹூதிகள். உன்னைப் பற்றி கவலையால் உஷ்ணமே இதிலிருந்து கிளம்பும் புகை. இவைகளைச் சேர்த்து வைக்கும் புருஷப் பிரயத்தினமே என் பெரு மூச்சுகள். அதை அணைக்கும் தண்ணீரைப் போன்றவனே நீ. அந்த தண்ணீரில்லாமல் இந்த பாழும் நெருப்பு வர வர வளர்ந்து என்னை நாசம் செய்யப் போகிறது. தன் கன்றையும் பசு பின் தொடர்வது ஆச்சரியமா? நீ எங்கே போகிறாயோ அங்கே நானும் வருவேன்", என்றாள்.


ராமன்,"அம்மா! தாங்கள் ஒன்றை யோசிக்கவேண்டும். நானும் காட்டிற்குஒ போய், தாங்களும் என்னுடன் வந்து, கைகேயியால் வஞ்சிக்கப்பட்ட என் தந்தையை கை விட்டால் அவர் பிழைக்க மாட்டார் என்பது நிச்சயம். சாதாரணமான பெண்களுக்கே பர்த்தாவைக் கை விடுவது வெகுக் குரூரமான செய்கை. தாங்களோ அதை மனதால் நினைப்பது பிசகு. என் தந்தையான சக்கரவர்த்தி உயிரோடுடிருக்கும் வரையில் தாங்கள் அவருக்கு பணிவிடை செய்யவேண்டும். இதுவே நமது முன்னோர்களின் நித்தியமான தர்மம்", என்றார்.


கௌசல்யை மஹா தர்ம சிந்தையுள்ளவள். ஆகையால் ராமனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அப்படியே செய்வதால் ஒப்புக் கொண்டாள். பிறகு அவர் அவளுடைய மனத்தில் குடி கொண்ட துக்கத்தை நீக்கி, புத்தியை ஸ்திரப் படுத்துவதற்காக "தாங்களும் நானும் மஹாராஜாவின் ஆணைக்குக் கீழ்படிய வேண்டியதால்லவா? அவர் நம்மை ஆளும் அரசன் . நம்மைக் காக்கும் பிரபு. நமக்கு தர்மத்தை உபதேசிக்கும் குரு. குணங்களால் எல்லோரைக் காட்டிலும் மேலானவர். எல்லோருக்கும் அதிபதி. பதினான்கு வருஷங்களை ஒரு கணத்தைப் போல காட்டில் விளையாட்டாகக் கழித்துவிட்டு, மறுபடியும் தங்களுடைய பாதங்களில் பணிவிடை செய்வேன்," என்றார்.


கௌசல்யை ராமனைக் காட்டிற்கு அனுப்புவதற்கும் தான் அயோத்யையில் இருப்பதற்கும் சம்மதித்தாள். ஆனால் அவரிடத்தில் தான் வைத்திருக்கும் அன்பையும் தன் சக்களத்திகளின் துஷ்ட ஸ்பாவத்தையும் நினைத்து நினைத்துக் கண்ணீர் பெருக, "ராமா! இந்த துஷ்ட ஸ்த்ரீகளின் நடுவில் நான் இருக்கவே மாட்டேன். காட்டிலிருக்கும் மிருகங்களைப் போல் உன்னுடன் ஆனந்தமாகக் காலம் கழிப்பேன். என்னால் உனக்குக் கொஞ்சம் கூடக் கஷ்டம் நேராது. உன் தந்தையின் உத்தரவுப்படி காட்டிற்குப் போகவேண்டுமென்று உனக்கு இஷ்டமிருந்தால் என்னையும் கூட்டிக் கொண்டு போ," என்றாள்.


பிறருக்கு ஏதாவது துக்கம் நேர்ந்தால் ராமனுடைய மனமும் துக்கத்தால் மிகவும் தவிக்கும். ஆனால் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதென்ற தர்மத்திற்கு எங்கே குறைவு வருமோ என்று பயந்து, கௌசல்யையின் துக்கத்தைப் பார்த்து தானும் துக்கப்படாமல், மனோதைரியத்தால் தன் துயரத்தை அடக்கிக் கொண்டார். அப்பொழுது தன் தாய் தான் வனத்திற்குப் போக சம்மதித்தவுடன் அவளுடைய துக்கத்தைச் சற்று ஆற்றுவதற்காகத் தன் துக்கத்தை வெளியிட்டு அழுது கொண்டு, "பெண்கள் பிழைத்திருக்கும் வரையில் கணவனே அவர்களுக்குதி தெய்வம். அவரே பிரபு. பூமண்டாலதியான அவர் நம்மை ரக்ஷிக்கும் பொழுது நாம் அனாதைகளல்ல. மேலும் சக்களத்திகள் தங்களுக்குக் கொஞ்சமாவது கெடுதி செய்ய நியாயமில்லை. எனக்குப் பதிலாக இந்த ராஜ்யத்தை ஆளப்போகிற பரதன் தர்மாத்மா. தர்மத்தை அனுஷ்டிப்பதிலேயே பிரியமுள்ளவன். எல்லோரிடத்திலும் பிரியமாகப் பேசுகிறவன். அப்படியிருக்க, தங்களிடத்தில் விசேஷ பக்தியுடன் பணிவு செய்வான். நான் காட்டிற்கு போன பிறகு மஹாராஜா என்னைவிட்டுப் பிரிந்த துக்கத்தால் கொஞ்சம்கூட வருத்தமடையாமல் இருக்கும்படி தாங்கள் வெகு ஜாக்கிரதையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவரோ வயது முதிர்ந்தவர். இந்தக் கொடிய சோகத்தால் அவர் இறந்து போகாதபடி எப்பொழுதும் வெகு ஜாக்கிரதையாகத் தாங்கள் நடந்து கொள்ள வேண்டும். பெண்கன் விரதங்களையும் உபவாசங்களையும் அனுஷ்டித்து மஹா புண்ணியங்களை சம்பாதித்தாலும், கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால், பாவிகளின் கதியை அடைவார்கள். தேவ பூஜைகளைச் செய்யாவிட்டாலும், பெரியோர்களை நஸ்கரிக்காமல் போனாலும், விரதங்கலை அனுஷ்டிக்காமல் இருந்தாலும் கணவருக்கு பணிவிடையைச் செய்து வந்தால், அவர்களுக்கு உத்தம லோகங்கள் கிடைக்கும். தங்களுடைய கணவனுக்கு பணிவிடை செய்வதே பெண்களுக்கு மேலான தர்மமென்று சுருதிகளும், ஸ்மிருதிகளும் உபதேசிப்பதற்கு இதுவே காரணம். முன்னோர்களின் ஆசாரமும் இதுவே.


"புத்தியைச் செலுத்த வேறு விஷயமில்லாமல் தாங்கள் சும்மா இருந்தால் துக்கம் மேலிடும். ஆகையால் பிராம்மண சிரேஷ்டர்களை முன்னிட்டு நான் நலமாய்ப் போய் வருவதற்காகச் சாந்தி ஹோமம், புஷ்டி ஹோமம் இன்னும் மற்ற மங்கள காரியங்களைச் செய்யுங்கள். சந்தனம், தாம்பூலம், புஷ்பம் முதலியவைகளால் தேவதைகளையும் பிராம்மணர்களையும் ஆராதியுங்கள். ஸ்னானம்,ஜபம்,உபவாஸம் முதலிய நியமங்களை அனுஷ்டித்துக் கொண்டு சுத்தமான அன்னத்தைப் புசித்து, தங்களுடைய நாதனுக்குப் பணிவிடை செய்வதில் கவனத்தைச் செலுத்துங்கள். நான் திரும்னி வருங்காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருங்கள். இப்படிச் செய்தால் தர்மாத்மாக்களில் சிரேஷ்டரான என் தந்தை பிழைத்திருப்பதையும், நான் இங்கே திரும்பி வருவதையும் பார்க்கும் பாக்கியத்தை அடைவீர்கள்", என்றார்.


புத்திரனை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற துக்கத்தால் கண்ணீர் பெருகக் கௌசல்யை, "காட்டிற்குப் போகவேண்டுமென்ற புத்தி உனக்கு உறுதியாக உண்டாயிருக்கிறது. என்னால் அதை மாற்ற முடியவில்லை. காலபலத்தை யாரால் ஜெயிக்க முடியும்? குழந்தாய், சாவதானமாகப் போய் வா. உனக்கு எப்பொழுதும் க்ஷேமமுண்டாகட்டும். ஜயமுண்டாகட்டும். நீ திரும்பி வந்தாலென்றி என் சோகம் தீராது. உன் தந்தையின் வார்த்தையை நிறைவேற்றி, உன் இஷ்டத்தையும் பூர்த்தி செய்து மஹா கீர்த்தியடைந்து நீ திரும்பி வந்த பிறகே நிகரற்ற சுகத்தை அனுபவிப்பேன். என் வார்த்தையையும் தள்ளிவிட்டுக் காட்டிற்குப் போகவேண்டுமென்று நீ ஒரே பிடிவாதமாக இருக்கும்படி உன்னைத் தூண்டிவிடும் விதியின் பலத்தை யாரால் அறிய முடியும்? மஹாபராக்கிரமசாலியே, க்ஷேமமாகப் போய் வா. சீக்கிரத்தில் திரும்பி வந்து மதுரமான வார்த்தைகளால் என் மனத்தை சந்தோஷப்படுத்து. ஒரு நிமிடம் கூட உன்னை விட்டுப் பிரிய என் மனம் சஹிக்கவில்லையே? நீ காட்டிலிருந்து மான் தோல்,மரவுரி ஜடைகளுடன் திரும்பி வரும் காலம் இந்த கணமாகவே இருக்கக் கூடாதா?" என்று சொல்லித்துக்கித்தாள். பிறகு ராமன் காட்டிற்குப் போகத் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டு, மிக்கப் பிரீதியுடன் அவருடைய க்ஷேமத்தை உத்தேசித்துச் செய்ய வேண்டிய மங்கள காரியங்களைச் செய்ய ஆரம்பித்தாள்.


ததா ஹி ராமம் வனனாஸ நிச்சிதம்
ஸமீக்ஷ்ய தேவீ பரமேண சேதஸா !
உவாச ராமம் ஸூப லக்ஷணம் வசோ
பபூவ ச ஸ்வஸ்த்யயநாபிகாங்க்ஷிணீ !!

ஸர்க்கம் 24  நிறைவு பெற்றது...

ஸ்ரீ ராம ராம ராம  

Wednesday, April 27, 2011

லக்ஷ்மணன் ராமனைத் தடுத்தது ஸர்க்கம் 23

ஸ்ரீ ராமசந்த்ராய நம:
ஸர்க்கம் 23
லட்சுமணன் ராமனைத் தடுத்தது
இதி ப்ருவதி ராமே து லக்ஷ்மணோ தஷிரா முஹூ: !
ச்ருத்வா மத்யம் ஜகாமேவ மநஸா துக்க ஹர்ஷயோ: !!


ராமன் இப்படிச் சொல்ல லட்சுமணன், தான் அதற்கு சம்மதிக்காததற்கு அடையாளாமாகத் தலையைக் கீழே குனிந்து கொண்டு "நமது தமையன் தர்மத்தை அனுஷ்டிப்பதில் உறுதியாய் இருக்கிறாரே" என்று சந்தோஷத்தையும், ராஜ்யத்தை விட்டுப் போகிறாரே என்று துக்கத்தையும் அடைந்தார். ஆனால், அந்த அபிப்பிராயத்தை வார்த்தையால் தெரிவிக்கவில்லை. அந்த எண்ணமும் அடுத்த கணத்தில் மாறிவிட்டது. அதிக கோபம் கொண்ட சிங்கம் புருவத்தை நெறிப்பது போல தன் புருவங்களை நெறித்துப் பெட்டியில் அகப்பட்ட சர்ப்பத்தைப் போல சீறிக் கொண்டு மனத்திலுள்ள கோபத்திற்கு அடையாளமாகத் தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டு , யானையின் துதிக்கை போன்ற தன் கையை ஆட்டிக் கொண்டு, குறுக்குப் பார்வையாக ராமனைப் பார்த்து , "தந்தையின் வார்த்தையை நிறைவேற்றாவிட்டால் தர்மத்திற்குக் குறைவு நேரும். நான் தர்மத்தை அனுஷ்டிக்காவிட்டால் பிறரும் அதைக் கைவிடுவார்கள். தந்தையின் கட்டளையை நிறைவேற்றாதவன், நம்மை காப்பாற்றுவானோ என்று மக்கள், என்னிடத்தில் சந்தேகப்படுவார்கள் என்று நினைத்துக் காட்டிற்குப் போவதில் தாங்கள் இவ்வளவு பரபரப்புடன் இருப்பது சரியல்ல. வீரீயம் இல்லாதவர்களும் சித்தபிரமை உள்ளவர்களும் ஷத்திரியர்களில் கீழ்பட்டவர்களுமே உண்மையில் சக்தியற்ற விதியை அனுசரித்து அதற்குக் கட்டுபடுவார்கள். தாங்கள் சத்திரிய சிரேஷ்டர். விதியை விலக்கும் சக்தியை இயற்கையாகவே உடையவர். கலங்காத புத்தி உடையவர். இப்படியிருக்க விதியை ஒருவராலும் வெல்ல முடியாது என்று, அந்த கையாலாகாத பதார்த்தத்தை மெச்சுவது நியாயமல்ல. மனோபலமில்லாதவர்களுக்கு விதி என்பது பிழைப்புக்கு வழியென்று பிருஹஸ்பதி சொல்லிருக்கிறார். ஆகையால், கையாலாகாதர்களே விதியை அனுசரிக்க வேண்டும். புருஷப்பிரயத்தனத்தை விதி வெல்லாது. அதை கொண்டாடலாமா?

"தந்தையின் வார்த்தயை நிறைவேற்றாமலிருந்தால் அதர்மம் நேருமென்று பயப்படுகிறீர்கள். தங்களுக்கு துரோகம் நினைத்த அந்தப் பாவிகளான கைகேயி, தசரதர் இவர்களிடத்தில் தங்களுக்கு ஏன் சந்தேகம் உண்டாகவில்லை?. அவர்கள் தர்மத்தை அனுஷ்டிக்கவில்லையா என்றால், தர்ம அனுஷ்டானமென்ற வேஷத்தால் தங்களுடைய துர்குணங்களையும், கெட்ட நடத்தைகளையும் மறைத்துக் கொள்ளும் சாமர்த்தியமுள்ள எவ்வளவோ மக்கள் இவ்வுலகத்தில் உள்ளார்கள். தாங்கள் தர்மாத்மாவானதால் அவர்களித்தில் தங்களுக்கு சந்தேகம் உண்டாகவில்லை. அவர்களைத் தங்களைப் போல் நினைக்கிறீர்கள். தங்களுடய அபிஷேகத்தைத் தடுக்க அவர்கள் நன்றாக யோசித்து, அவர்கள் இப்படி நடக்கிறார்களென்று தங்களூக்கு ஏன் தெரியவில்லை?. வெகு காலத்திற்கு முன்பாகவே அவர்களிப்படிக் கலந்து யோசனை செய்யாவிட்டால் எப்பொழுதோ கொடுத்த வரங்களைக் கைகேயி இதுவரையில் மறந்து கேட்காமலிருப்பாளா? ராமன் எனக்கு மூத்த புதல்வன். இந்த ராஜ்யம் அவனுக்கு நியாயமாகக் கிடைக்க வெண்டியது. ஆனால், எனக்கு, உன் புதல்வனனான பரதனுக்குக் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம். அவன் ராமனுக்கு இளையவன். ஆகையால் அப்படிச் செய்ய மக்கள் சம்மதிக்கமாட்டார்கள். ஆகையால், அதற்கு ஒரு உபாயம் செய்வோம். ராமனுக்கு அபிஷேகம் செய்வதாக எல்லா மக்களுக்கும் மத்தியில் நான் அறிவிக்கை செய்கிறேன். பிறகு நீ முன் காலத்தில் கொடுத்த வரங்களைப் பூர்த்தி செய்யும்படி என்னைக் கட்டாயப்படுத்து. நான் அதற்கு இஷ்டமில்லாதவன் போலும், நிர்ப்பந்தத்தின் பேரில் ஒப்புக்கொள்வதாகக் காட்டிக் கொண்டு சம்மதிக்கிறேன். அப்பொழுது ராமனைப் பல வருஷங்கள் வரையில் காட்டிற்கு அனுப்பி, நமது குழந்தை பரதனுக்கு அபிஷேகம் செய்வோம்," என்று நமது தந்தை கைகேயியுடன் கலந்து துரோகமாகச் செய்த யோசனை என்று தங்களுக்கு ஏன் இன்னும் தோன்றவில்லை?. மூத்த புதல்வனிருக்கையில் இளையவனுக்கு அபிஷேகம் செய்வது இவ்வுலகத்தில் எவனுக்காவது இஷ்டமாகுமா? அதிலும் நான் சம்மதிப்பேனா? பொறுத்துக் கொண்டிருக்கமாட்டேன். தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

"தாங்கள் மஹா புத்திமானல்லவா? தர்ம அனுஷ்டானமென்ற ஒரு காரணத்தால், அபிஷேகம் செய்து கொள்ள மாட்டேன். வனத்திற்கே போவேன். அப்படிச் செய்யாவிட்டால் மஹாபாவம் நேரும்" என்று பிசகான அபிப்பிராயம் கொண்டிருக்கிரீர்கள்.அந்தத் தர்மம் எனக்கு விரோதி. கைகேயியின் வார்த்தைக்குக் கட்டுபட்டு தர்ம விரோதமாயும் அனைத்து மக்களும் நிந்திக்கும் வார்த்தைகளை, நமது தந்தை சொல்லவும், ஒருவராலும் தடுக்கக் கூடாத சக்தியையுடைய தாங்கள் அவைகளை நிறைவேற்றுவதாக நிச்சயிப்பதும் எப்பொழுதாவது நேருமா?ஆகையால் தங்களுக்குச் புத்தி கலங்கியிருக்கிறதென்றி வேறல்ல. அவர்கள் கபடமாகத் தங்களுடைய அபிஷேகத்தை நிறுத்துவதற்காகச் செய்த ஏற்பாட்டை, உண்மை என்றெண்ணி மோசம் போகிறீர்கள் என்பதை நினைக்க நினைக்க எனக்குத் துக்கம் மேலிடுகிறது. தர்மத்தை இப்படி அனுஷ்டிப்பதில் இவ்வுலகத்தில் ஒருவருக்கும் சம்மதம் இருக்காது. அவர்கள் பெயருக்கு மட்டுமே நமக்கு தாய் தந்தையர்களே ஒழிய வேறல்ல. சத்ருக்கள் என்பதே உண்மை. நமக்கு கெடுதியைத் தேடுகிறவர்கள் காமத்திற்கு அடிமைகள். ஆகையால் அவர்களுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று எவனாவது நினைப்பானா?

"அவர்களுடய இப்படிப்பட்ட புத்தி தோன்றியது விதியால் நேர்ந்தது. கைகேயியின் குற்றமல்லவே" என்று சொன்னால் அந்த சமாதானத்தை ஒப்புக் கொள்ள முடியுமா? எனக்கும் சரியாகத் தோன்றவில்லை. பயந்தவர்களும் வீரியமில்லாதவர்களுமே தெய்வத்தைப் பின் பற்றுவார்கள். வீரர்களும் மன உறுதியுள்ளவர்களும் அதை லட்சியம் செய்யமாட்டார்கள். தன் பலத்தால் விதியை வெல்லக் கூடியவனிடத்தில் அதன் ஆட்டம் கொஞ்சமேனும் பலிக்காது. அவனுக்கு ஆகவேண்டிய காரியத்தையும் அது கெடுக்காது. விதியைக் காட்டிலும் புருஷப் பிரயத்தனம் பலமுள்ளதென்பதைக் காட்ட இன்று பிரத்யக்ஷமாக ஓர் உதாரணத்தைப் பாருங்கள். விதியின் பலமும் புருஷப்பிரயத்தனத்தின் பலமும் இன்று நன்றாக விளங்கும். அவைகளுக்குள்ள பேதத்தையும் தாரதம்யத்தையும் எல்லோரும் தெளிவாக அறிவார்கள். விதியே தங்களுடைய அபிஷேகத்தைத் தடுத்ததென்று தாங்களும் இன்னும் பலரும் மக்களும் எண்ணி கொண்டிருக்கிறீர்கள். அந்தத் தெய்வம் என் பலத்தால் இன்று ஜயிக்கப்பட்டு என்ன பாடுபடுமென்பதை எல்லோரும் பார்ப்பீர்கள். மதம் பிடித்துச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு மாவெட்டியால் குத்துவதையும் லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படி ஓடும் யானையைப் போல், தடையில்லாமல் செல்லும் தெய்வத்தை, என் புத்தி என்ற பாசத்தால் அடக்கித் திருப்பிக்கொண்டு வருகிறேன். லோகபாலர்கள் ஒன்று சேர்ந்தாலும், இந்த மூன்று லோகங்களில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்தாலும், தங்களுடைய அபிஷேகத்தைத் தடுக்க முடியாது. அப்படியிருக்க, தமது தந்தை தடுக்கப் போகின்றாரோ? தங்களுடைய அபிஷேகத்தைத் தடுத்து, தங்களைக் காட்டிற்கு அனுப்பவேண்டுமென்று ரகசியமாக யோசனை செய்தவர்களையே இந்த ராஜ்யத்திலிருந்து துரத்தி அந்தக் காட்டில் பதி நான்கு வருஷங்கள் வசிக்கும்படி செய்கிறேன். தங்களுடைய அபிஷேகத்தை நிறுத்த வேண்டுமென்றும் அவர்களுடைய புத்திரனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்றும் அவர்கள் கொண்டிருக்கும் ஆசையை இன்று வேரறுக்கிறேன். தெய்வத்துடன் விரோதிதுக் கொண்டு ஒருவன் தப்பினாலும் தப்பலாம். என்னை விரோதித்துக் கொண்டு உயிரோடு இருக்கமுடியுமா?

"தாங்கள் வனத்திற்கா போகவேண்டும்? போவது நிச்சயமே. ஆனால் இப்பொழுது அல்ல. இந்தக் காரணத்திற்காக அல்ல. நமது முன்னோர்களான ராஜரிஷிகள் வெகுகாலம் வரையில் ராஜ்யத்தை ஆண்டு, வயது சென்ற பிறகு வானப்பிரஸ்தாசிரமத்தைக் கைகொண்டு ராஜ்யத்தைப் புத்திரர்களிடத்தில் ஒப்புவித்து, "நமது குடிகளை உன் குழந்தையைப் போல் பரிபாலிக்க வேண்டும்", என்று கட்டளையிட்டு, வனத்திற்குப் போய்த் தவம் செய்வது வழக்கம். அப்படியே தாங்களும் அனேகமாயிரம் வருஷங்கள் வரையில் ராஜ்ய பரிபாலனம் செய்து விட்டுப் பிறகு வனத்திற்குப் போவீர்கள். அப்பொழுது தங்களூடைய புத்திரர்கள் ராஜ்யத்தை ஆள்வார்கள்."

நமது தந்தை நிலையான சிந்தனை உடையவர் அல்ல. ராஜ்யம் அடிக்கடி மாறுமென்று தங்களுக்கு சந்தேகமுண்டாகி, தங்களுக்கு ராஜ்யம் வேண்டாமென்றால், கடலை அதன் கரை காப்பது போல நான் இந்த ராஜ்யத்தைக் காப்பாற்றுவேன். இப்படியே பிரதிக்ஞை செய்வேன். தவறினால் வீரர்கள் அடையவேண்டிய சொர்க்கம் கிடைக்காமல் போகட்டும்.

ஆகையால், இப்பொழுது தயாராயிருக்கும் பதார்த்தங்களால் அபிஷேகம் செய்து கொள்ளும் விஷயத்தில் தங்கள் மனத்தைச் செலுத்த வேண்டும். அதைத் தடுக்கும் அரசர்களை நெருங்க விடாமல் துரத்த நான் ஒருவனே போதும். இந்தக் கைகள் வெறும் அழகுக்கோ? என் வில்லும் இடுப்பில் கட்டியிருக்கும் கத்தியும் என் அம்பறையில் நிறைந்திருக்கும் பாணங்களும் வெற்ம் அலங்காரத்திற்கோ? விளையாடவோ அல்லது பெருமைக்கோ? இந்த நான்கும் நமது சத்ருக்களை வேரறுக்க போதுமானவையல்லவா? எனக்குச் சத்ருவென்று ஒருவன் ஏற்பட்டால் அவன் உயிரோடுருக்கப் பொறுக்கமாட்டேன். அவன் வஜ்ராயுதத்தைத் தரித்த இந்திரனாயிருந்தாலும் சரி, மின்னலைப் போல் பிரகாசிக்கும் என் கத்தியால் அவனுடைய பிராணனை வாங்கி விடுவேன். பாருங்கள், இன்றைக்கு என் கையால் வெட்டப்பட்ட யானைகள், குதிரைகள், மனிதர்களுடைய கைகால்கள், தலைகள் பூமியில் விழுந்து, அடர்ந்த காட்டைப் போல் சஞ்ச்சரிக்க முடியாமல் செய்து விடும். என் கத்தியால் வெட்டித் தள்ளப்பட்ட யானைகள்,கொஃஸுந்து விட்டெரியும் மலைகளைப் போலவும், மின்னல்களுடன் கூடிய மேகங்களைப் போலவும், பூமியில் விழும். நான் கையில் வில்லை எடுத்து யுத்தம் செய்ய நின்றால் இந்த உலகத்திலுள்ள புருஷர்களுக்குள் எவனாவது தன்னைச் சூரனென்றும் ஆண்பிள்ளை என்றும் சொல்லிக் கொள்ள துணிவானா? எல்லோரும் பெண்களைப் போல் ஓடி ஒளிந்து கொள்வார்களல்லவா? ஒரே சமயத்தில் ஒரே பாணத்தால் அல்ப வீரியமுள்ள பல சத்ருக்களை அடிப்பேன். இப்படி யானைகளையும் குதிரைகளையும் வீரர்களையும் மர்ம ஸ்தானங்களில் பாணங்களால் துளைப்பேன். "நீ ஒருவனாய்ப் பலரை எப்படி ஜெய்ப்பாய்?", என்றுத் தங்களுக்கு சந்தேகம் வேண்டாம். நான் உபதேசம் பெற்ற அஸ்த்திரங்களின் மஹிமை இன்று வெளிப்படும். நமது தந்தையின் அதிகாரத்தைப் பிடிங்கித் தங்களுக்கு கொடுக்கப் போகிறேன். என் இரண்டு கைகளும் சந்தனம் பூசிக் கொள்ளவும், ஆபரணங்களைத் தரிக்கவும், தானங்களைக் கொடுக்கவும், மித்திரர்களைக் காப்பாற்றவும் இதுவரையில் உபயோகப்பட்டன. அவை இன்றைக்குத் தங்களுடைய அபிஷேகத்திற்குத் தடை செய்கிறவர்களை அழிப்பதில் உபயோகப்படும். ஆகையால், தங்களுடைய விரோதியான எவனுடைய உயிரையும்,கீர்த்தியையும்,மித்திரர்களியயும் நாசம் செய்ய வேண்டும்?. நான் தங்களுடைய ஊழியன். தங்களுடைய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பூமண்டலம் தங்களுடைய ஆளுகைக்குள் வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?." என்றார்.

ரகுகுலத் திலகன்,"குழந்தாய், நமது பெற்றோர்கள் பிழைத்திருக்கும் வரையில் அவர்களுடைய கட்ட்ளைப்படி நடக்க வேண்டும். அவர்கள் இறந்த பிறகு ஒவ்வொரு வருஷத்திலும் அதே திதியில் பல பேர்களுக்கு அன்னம் இடவேண்டும். கயாஷேத்திரத்தில் அவர்களை உத்தேசித்துப் பிண்டம் போட வேண்டும். இம்மூன்று காரியங்களைச் செய்வதால் ஒருவனுக்குப் புத்திரனென்று பெயர் கிடைக்கிறது. ஸ்மிருதிகள் இதையே உபதேசிக்கின்றன. ஆகையால், நமது தந்தையின் வார்த்தையை மீறமாட்டேன். எப்படியானாலும் அதை நிறைவேற்றப் போகிறேன். உலகத்தில் சாதுக்கள் அனுஷ்டிக்கும் மார்க்கம் இதுவே", என்று தான் முன்பு விஸ்தாரமாக உபதேசித்த தர்மத்தை இப்பொழுது சுருக்கமாகச் சொல்லி, லட்சுமணனுடைய கண்ணீரைத் துடைத்து, அடிக்கடி சமாதானம் செய்தார்.

விம்ருஜ்ய பாஷ்பம் பரி ஸாந்த்வ்ய சாஸக்ருத்
ஸ லக்ஷ்மணம் ராகவ வம்ஷவர்தன:!
உவாச பித்ர்யே வசனே வ்யவஸ்திதம்
நிபோத மாமேவ ஹி சௌம்ய ஸத்பதே !!

லக்ஷ்மணன் ராமனைத் தடுத்தது சர்க்கம் 23  நிறைவு பெற்றது.

ஸ்ரீ ராம ராம ராம